search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லணை திறப்பு"

    காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து இன்று 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.#Kallanai
    பூதலூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதைதொடர்ந்து அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார்.

    பின்னர் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு கதவணையை வந்தடைந்தது. அங்கிருந்து தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    முக்கொம்பில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது.

    இதைதொடர்ந்து கல்லணையில் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு முதலில் கொள்ளிடத்தின் கீழ்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மேள தாளத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் கல்லணை கரிகாலன் சோழன் சிலை அருகில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கல்லணையில் உள்ள கரிகாலன் சோழன், அகத்தியர், காவிரியம்மன், ராஜராஜசோழன் ஆகியோரது சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன.

    இதையடுத்து டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, இரா.காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

    அப்போது மதகுகளில் இருந்து சீறி பாய்ந்த தண்ணீரின் மீது விதைநெல், மலர்களை தூவி காவிரியை வழிபட்டனர். இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரிக்கு 7 ஆயிரம் கன அடியும், வெண்ணாறில் 7 ஆயிரம் கன அடியும், கல்லணை கால்வாய்க்கு ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் வைத்திலிங்கம், தஞ்சை பரசுராமன், மயிலாடுதுறை பாரதிமோகன், நாகை கோபால், திருச்சி குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பட்டுக்கோட்டை சேகர், பேராவூரணி கோவிந்தராசு, மயிலாடுதுறை ராதா கிருஷ்ணன், பூம்புகார் பவுன்ராஜ், சீர்காழி பாரதி, கலெக்டர்கள் தஞ்சை அண்ணாதுரை, திருச்சி ராஜாமணி, நாகை சுரேஷ்குமார், திருவாரூர் நிர்மல்ராஜ் மற்றும் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், வேளாண் இணை இயக்குனர் மதியழகன் மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    மேலும் புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரி கலெக்டர் கேசவன், புதுச்சேரி தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், ஆகியோரும் கலந்துகொண்டனர்.

    கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி விவசாயிகள் சாகுபடி செய்ய தேவையான விதை, உரம் ஆகியவை தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பா சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  #Kallanai #KallanaiDam
    காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கல்லணைக்கு வந்து சேருகிறது.

    பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந் தேதி காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர் மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    கல்லணையில் தண்ணீர் திறப்பு நிகழ்வின் போது முதலில் கொள்ளிடத்தின் கீழ்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    பின்னர் கல்லணை கரிகாலன் சோழன் சிலை அருகில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் வழிபாடு நடைபெறும். அதன் பின்னர் முக்கிய பிரமுகர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீரை திறந்து விடுவார்கள்.

    இதைதொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும். நிறைவாக கருப்பண்ணசாமி கோவிலில் வழிபாடு நடைபெற்ற பின்னர் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படும்.

    கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


    ×